மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், அரசுத் தேர்வுத்துறையால் நடத்தப்படும் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வுகளில் அந்நாளில் இருந்த நடைமுறைப்படி விடைத்தாள்கள் மறுபரிசீலனையை மேற்கொள்ளாமல், மதிப்பெண் மறுகூட்டல் மட்டும் எவ்விதக் கட்டணமுமின்றி இருப்பதைத் தொடரலாம் என ஆணை வெளியிடப்பட்டது.
2 மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மாணாக்கர்களின் நலன் கருதி மேல்நிலைத் தேர்வுகளில் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய நான்கு (4) பாடங்களின் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை மட்டும் மாணவ/ மாணவிகள் விரும்பினால் ஜெராக்ஸ் நகல் எடுத்து காண்பிக்கவும். தேவைப்படின் மறுமதிப்பீடு செய்யவும் சில நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டது.
3. மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மேல்நிலைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள்களின் அச்சுப்பகர்ப்பு நகல் மற்றும் மறுமதிப்பீடு செய்யும் முறையை பிற பாடங்களுக்கான விடைத்தாள்கள் அனைத்திற்கும் நீட்டித்து ஆணை வெளியிடப்பட்டது.
4. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், இனிவரும் கல்வியாண்டுகளில், மேல்நிலைத் தேர்வு முடிவுகளுக்கு பிறகு நேரடி மறுகூட்டலுக்கு (மறுகூட்டல் I) விண்ணப்பிக்கும் முறையினை இரத்து செய்யுமாறும், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு முதலில் தங்களது விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து, விடைத்தாள் நகல் பெற்ற பின்னர், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் நடைமுறையை செயல்படுத்தவும் ஆணை வழங்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் அரசினை கேட்டுக்கொண்டுள்ளார்.
5. அரசுத் தேர்வுகள் இயக்குநரின் மேற்காண் கருத்துருவினை கவனமுடன் பரிசீலித்த அரசு, அதனை ஏற்று, மேல்நிலைத் தேர்வு முடிவுகளுக்கு பிறகு நேரடி மறுகூட்டலுக்கு (மறுகூட்டல் I) விண்ணப்பிக்கும் முறையினை இரத்து செய்தும், இனிவரும் கல்வியாண்டுகளில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்துக் கொள்ளும் பொருட்டு, முதலில் தங்களது விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து, விடைத்தாள் நகல் பெற்ற பின்னர், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையினை செயல்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கியும் அரசு ஆணையிடுகிறது.