கல்வி என்பது வேர் கசக்கும், பழம் இனிக்கும் என்பது முதுமொழி. பெயரை கேட்டாலே பதறி ஓடிய காலம் மாறி, தொழில்நுட்பம் மற்றும் அங்கு இருக்கும் பல்வேறு நவீன வசதிகளால் இப்போதெல்லாம் மாணவர்கள் விரும்பி செல்லும் இடமாக மாறிவிட்டன பள்ளிக்கூடங்கள். கல்வி என்பது மாணவர்களுக்கு திகட்டாத தித்திப்பை மட்டும் வழங்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதில் ஒன்றுதான் மணற்கேணி செயலி திட்டம்.
இது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பினால் உருவாக்கப்பட்ட செயலியாகும். நவீன தொழில்நுட்பத்தில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப கல்வியை உள்ளங்கைக்குள் அடக்கவேண்டும் என்பதற்காகவே இது தொடங்கப்பட்டது. இது மாணவர்களின் விருப்ப பட்டியலில் பிரதான இடத்தை பிடித்துள்ளது. மணற்கேணி செயலி, 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் அனிமேஷன் வீடியோக்களாக வழங்குகிறது. 2டி, 3டி என்ற இரண்டு பரிமாண, முப்பரிமாண வீடியோக்களை மாணவர்கள் பார்த்ததுமே அதில் உள்ள கல்வி சார்ந்த சாராம்சங்களை சாறாக பிழிந்து, புரிந்துகொள்கிறார்கள்.
இதனால் அந்த செயலி மாணவர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.
இது கல்வியை சுமையாக இல்லாமல் சுமுகமாக மாற்றியிருக்கிறது. கற்றலை எளிதாக்கும் மணற்கேணி செயலியை பள்ளி கல்வித்துறை கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந்தேதி அறிமுகம் செய்தது. அப்போதில் இருந்தே மணற்கேணி செயலி மாணவர்களின் ஏணியாக செயல்படுகிறது. இந்த செயலியை இதுவரையிலும் 8 லட்சத்து 91 ஆயிரத்து 261 பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.