மோசடிகளை தவிர்ப்பதற்காக கியாஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் பயோமெட்ரிக் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். கே.ஒய்.சி. செய்யாவிட்டால் சிலிண்டர் பெறுவது நிறுத்தப்படுமா? என்பதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.
கியாஸ் சிலிண்டர்
சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) சிலிண்டர் வாங்குவதில் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது நுகர்வோர் தங்கள் ஆதார் எண்ணை சரிபார்க்கவும், மோசடியை தடுக்கும் நோக்கிலும் இந்த திட்டம் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய ஆதார் பயோமெட்ரிக்கை தங்களுக்கான கியாஸ் ஏஜென்சியில் பதிவு செய்து வருகிறார்கள். ஆனால் இதற்கு போதுமான அளவு விழிப்புணர்வு இல்லாததால் கியாஸ் சிலிண்டர் ஊழியர்களே வீடு, வீடாக இதுகுறித்து அறிவுறுத்தி வருகிறார்கள்.
ஆதார் கார்டு கொண்டு செல்லுங்கள்
இதற்கிடையே, கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பயோமெட்ரிக்கை வழங்காவிட்டால் அவர்களுக்கு சிலிண்டர் நிறுத்தப்படும் என்ற உறுதி செய்யப்படாத தகவல் வெளியானதால் ஏராளமானவர்கள், கியாஸ் ஏஜென்சிகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
தற்போது, ஏராளமானவர்கள் பயோமெட்ரிக் பதிவு செய்து வருகிறார்கள். இதற்காக கியாஸ் ஏஜென்சிகளில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை பயோமெட்ரிக் பதிவு செய்யாதவர்கள் அருகில் உள்ள தங்களது கியாஸ் ஏஜென்சிக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக முந்தைய கியாஸ் பில், ஆதார் கார்டு கொண்டு செல்ல வேண்டும். அங்கு அவர்களது ஆதார் கார்டு பதிவு செய்யப்பட்ட பிறகு, ஆதார் கேமரா மூலம் கருவிழி போட்டோ எடுக்கப்படுகிறது.
ஆன்லைன் மூலம்...
ஆன்லைனிலும் பதிவு செய்து பயோமெட்ரிக் அங்கீகாரத்தை மேற்கொள்ளலாம். இதற்காக அவர்கள் எல்.பி.ஜி. செயலியை டவுன்லோடு செய்து, அந்த செயலிக்குள்ளேயே பயோமெட்ரிக் பதிவு செய்து கொள்ளலாம்.
பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம், சமையல் எரிவாயு மானியங்கள் தகுதியற்ற நபர்களுக்கு செல்லாமல் தடுக்க முடியும் என்பதற்காக மத்திய அரசு இந்த முடிவு மேற்கொண்டுள்ளது.
பயோமெட்ரிக்
அதேநேரத்தில் பயோமெட்ரிக் செய்யாதவர்களுக்கு சிலிண்டர்கள் வாங்குவது நிறுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி வருவது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
மோசடிகளை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் கியாஸ் சிலிண்டர் வினியோக முறையில் பயோமெட்ரிக்கு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. சிலிண்டர் வைத்திருக்கும் நுகர்வோர்கள் விரைவாக தங்களது பயோமெட்ரிக் பதிவை நிறைவு செய்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கால நிர்ணயம் இல்லை
அதே நேரத்தில் கே.ஒய்.சி. தராதவர்களுக்கு சிலிண்டர் வழங்குவது நிறுத்தப்படாது. மோசடிகளை கண்டறியவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பயோமெட்ரிக் முறை செய்வது ஒவ்வொருவரின் கடமை. மோசடி இல்லாத சிலிண்டர் வினியோகத்திற்கு இது கட்டாயம்.
இதை இண்டேன், எச்.பி., பாரத் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்வதில்லை. மத்திய அரசு முடிவுதான் இது. எனவே பயோமெட்ரிக் பதிவு மேற்கொள்ள வேண்டும். இந்த பதிவுக்கு கால நிர்ணயம் இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.