அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 463 என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதற்கான 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (மே) 7-ந்தேதி தொடங்கி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடைந்தது.
நடப்பு கல்வியாண்டு, என்ஜினீயரிங் படிப்புக்கு மொத்தம் 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களில், 2 லட்சத்து 49 ஆயிரத்து 883 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். இதில், 2 லட்சத்து 26 ஆயிரத்து 359 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். வழக்கம்போல நடப்பு கல்வியாண்டிலும் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு படிப்பு, தரவு அறிவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு முன்னுரிமை அளித்திருக்கிறார்கள்.
என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். அதனைத்தொடர்ந்து, வருகிற 11-ந்தேதி சமவாய்ப்பு எண் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன் 10-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
தரவரிசை பட்டியல் வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. தரவரிசை பட்டியல் தொடர்பாக குறித்து மாணவர்கள் 28-ந்தேதி முதல் ஜூலை மாதம் 2-ந்தேதி வரையில் முறையிடலாம். கலந்தாய்வு தேதி குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.