முதல் நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 60க்கும் மேற்பட்ட அரசாணைகள்
பிறப்பித்து சலுகைகள் வழங்கியதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து
மாற்றுத்திறனாளிகளும் திரண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மாபெரும்
பாராட்டு விழா!
பூம்புகார் பெருந்தச்சன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1974, 1975
ஆகிய ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டது சென்னை மாநகரின் கலைச்செல்வம் வள்ளுவர்
கோட்டம். இந்த வள்ளுவர் கோட்டம் சுற்றுலா மையமாக எழுச்சிபெற்று உலகத் தமிழ்
அறிஞர்களாலும், தமிழ்நாட்டு மக்களாலும் பெரிதும் பாராட்டப்படுகிறது. மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வள்ளுவர் கோட்டத்தின் முன்
நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு அவருடைய
பிறந்தநாளின்போது மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக சென்றபோது, வள்ளுவர்
கோட்டத்தின் உள்ளே சென்று பார்வையிட்டார்கள். அப்போது, முந்தைய 10 ஆண்டுகால
ஆட்சியில் பராமரிக்கப்படாமல் பாழ்பட்டிருந்த வள்ளுவர் கோட்டத்தின் தோற்றத்தைப்
பார்த்து மிகவும் நொந்து வேதனைக்கு ஆளானார்கள். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகம்
வந்தபின், அதிகாரிகளை அழைத்து வள்ளுவர் கோட்டத்தைப் புதுப்பித்திட வேண்டும் என்ற
உணர்வோடு திட்டமிட்டு ரூ.80 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் நடைபெறும்
என்று அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அதன் பயனாக. வள்ளுவர் கோட்டம்
புதுப்பிக்கப்பட்டு எழிற்கோலம் கொண்டுள்ளது. தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய
நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தக்க வகையில் வடிவமைக்கப்பட்டு 20,000 சதுர அடி
பரப்பளவில் 1,548 இருக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட பிரம்மாண்டமான
"அய்யன் வள்ளுவர் கலையரங்கம்" மேம்படுத்தப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர்
அவர்களின் உரை விளக்கத்துடன் 1,330 திருக்குறள்களையும் கொண்ட குறள் பலகைகள்
அமைக்கப்பட்டு ஓவியங்களுடன் புதிய வடிவம் பெற்றுள்ளது "குறள் மணிமாடம்". 100 பேர்
அமரும் வசதியுடன் "திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம்" இலக்கிய
விவாதங்கள் ஆவணப்பதிவு மற்றும் கல்வி ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில்
புதுப்பிக்கப்பட்டுள்ளது. 27,000 சதுர அடி பரப்பில் தரை நிலை, தரையின் கீழ்
நிலப்பகுதிகளில் 162 கார்கள் வரை நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வள்ளுவர் கோட்டத்தைப் பார்வையிட வருகைபுரியும் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில்
3,336 சதுர அடியில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. உணவகப் பகுதியில் 72 பேர் அமரவும்,
காபி அருந்தும் பகுதியில் 24 பேர் அமரக் கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. 275.56 சதுர
அடி பரப்பளவு கொண்ட நினைவுப் பொருள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கான விற்பனையகமும்
அருகே அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையை நோக்கிப் பார்வையாளர்கள்
தடையின்றிச் செல்வதற்கு வசதியான மூடிய நடைபாதையுடன் கூடிய வேயா மாடம்"
ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர்த் தேர் வடிவில் 106 அடி உயரமுடைய திருக்குறள்
கருத்துகளை விளக்கும் சிற்பங்கள் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள கல் தேர்
ஒலி-ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையிடும்
பொதுமக்கள் உள்ளம் மகிழும் வகையில் இசை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த
மகத்தான முறையில் புனரமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டம் நாளை மாலை
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால்
திறந்துவைக்கப்படுகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பாராட்டுத்
தெரிவிக்கும் மாற்றுத்திறனாளிகள் புனரமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தின் முதல்
நிகழ்ச்சியாக நாளை மாலை மாற்றுத்திறனாளிகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு
நன்றி தெரிவித்துப் பாராட்டு விழா நடத்துகிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து
மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்தரத்தக்க வகையில் பிறப்பித்திருக்கிறார்கள். 60க்கும்
மேற்பட்ட அரசாணைகளை உள்ளாட்சி நிறுவனங்களில் 13,988 மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன
அடிப்படையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை மெரினா,
பெசன்ட் நகர், ஆகிய பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் கடல் நீரைத் தொட்டு
கால்பதித்து மகிழத்தக்க வகையில் இரண்டு அணுகுசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்ட சிறப்பு ஆணையம், விபத்து நிவாரணத் தொகை
உயர்த்தி வழங்கியமை. நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி. பார்வையற்ற மற்றும்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில
விருதான "ஹெலன் கெல்லர்" விருது வழங்குதல், ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்
திறனாளிகளுக்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும்
திட்டம், முனைவர் பட்டத்திற்குப் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூபாய்
ஒரு இலட்சம் ஊக்கத் தொகை, மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு துறைத்
தேர்விலிருந்து விலக்கு, வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத கடை
ஒதுக்கீடு. மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1,000 என்பது ரூ.1,500 ஆக
உயர்த்தியது. கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1,500
என்பது ரூ.2,000 ஆக உயர்த்தியமை, மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா
வழங்கியது உட்பட அனைத்துச் சலுகைகளுக்கும் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் எனும் பெயரைச் சூட்டி, அவர்கள்
மனதிலிருந்த குறைகளை அகற்றியவர் என்பதை நினைவுகூரும் இந்த வேளையில் மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் சமூகப்
பொருளாதார நிலைகள் உயரும் வகையில் இதுவரை எந்த அரசும் செய்திடாத பல புதிய சலுகைகளை
வழங்கி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் வளம் சேர்த்துள்ளார்கள். மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் வழங்கிய எண்ணற்ற சலுகைகளை நினைந்து மகிழ்ந்து தமிழ்நாட்டில்
உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒன்று கூடி வள்ளுவர் கோட்டத்தில் மிகப்பெரிய
நன்றி அறிவிப்புப் பாராட்டு விழா நடத்துகிறார்கள். வள்ளுவர் கோட்டத்தில் முதல்
நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகளின் பாராட்டு விழா 21.6.2025 சனிக்கிழமை மாலை 5.00
மணியளவில் கோலாகலமாக நடைபெறுகிறது.

No comments:
Post a Comment