அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 'வானவில் மன்றம்' திட்டம்: முதல்-அமைச்சர் இன்று தொடங்கிவைக்கிறார் - Thulirkalvi

Latest

Sunday 27 November 2022

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 'வானவில் மன்றம்' திட்டம்: முதல்-அமைச்சர் இன்று தொடங்கிவைக்கிறார்

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 'வானவில் மன்றம்' திட்டம்: முதல்-அமைச்சர் இன்று தொடங்கிவைக்கிறார்

 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல், கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்த ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார். திருச்சி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மற்றும் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

 இதற்காக இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, காலை 9.50 மணிக்கு அவர் திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, காலை 10.30 மணிக்கு திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு செல்கிறார். 

அங்கு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ரூ.25 கோடி செலவில் 'வானவில் மன்றம்' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பின்னர், நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனத்தையும், மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழி அனுப்பி வைக்கிறார். பெரம்பலூர், அரியலூர் பயணம் நிகழ்ச்சி முடிந்ததும், திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு செல்கிறார்.

 மதியம் 12 மணிக்கு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூருக்கு செல்லும் முதல்-அமைச்சர், அங்கு சிப்காட் தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்கு சென்று, மதிய உணவு சாப்பிட்டு ஓய்வு எடுக்கும் அவர், மாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகைமேட்டுக்கு மாலை 5.15 மணிக்கு சென்றடைகிறார்.

 அங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யும் முதல்-அமைச்சர், அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, அரியலூர் விருந்தினர் மாளிகைக்கு இரவு 7 மணிக்கு வந்தடைகிறார். இரவு உணவை முடித்துவிட்டு அங்கேயே தங்கி ஓய்வு எடுக்கிறார். நலத்திட்ட உதவி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.15 மணிக்கு அங்கிருந்து புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை 9.30 மணிக்கு அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

 அத்துடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கியும் வைக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் திருச்சிக்கு காரில் வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 12.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை வருகிறார். 

முதல்-அமைச்சரின் வருகையையொட்டி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் முதல்-அமைச்சரை வரவேற்க வழியெங்கும் கட்சிக்கொடிகளுக்கு தி.மு.க.வினர் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment