செரிமானம் சீராக நடைபெற தண்ணீர் பருக சிறந்த நேரம் எது?

0 ThulirKalvi
ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நீரேற்றம் அவசியமானது. உடலில் நீர்ச்சத்தை தொடர்ந்து பராமரிக்க அவ்வப்போது தண்ணீர் பருகுவது அவசியமானது. அதற்கு நேர வரைமுறை இல்லை. ஆனால் மூன்று வேளை சாப்பிடும் உணவும் சீராக செரிமானம் ஆவதற்கும், செரிமான செயல்முறை இடையூறு இன்றி தொடர்வதற்கும் தண்ணீரை சரியான நேரத்தில் பருகுவது அவசியமானது. நிறைய பேர் சாப்பிடும் போது தண்ணீர் பருகக்கூடாது என்பார்கள். சாப்பிட்டு முடித்ததும் அரை மணி நேரம் கழித்து தண்ணீர் பருகினால் செரிமானம் நன்றாக நடைபெறும் என்று சொல்வார்கள். சிலரோ சாப்பிட்ட உடனேயே தண்ணீர் பருகவேண்டும் என்பார்கள். ஆனால் செரிமானம் சீராக நடைபெறுவதற்கு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் பருகுவதுதான் சரியான நடைமுறை என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ‘‘உணவு உட்கொள்வதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் குடிப்பது செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் உதவும். அப்படி உணவு உண்பதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது இரைப்பை சுரப்புக்கும், நொதி செயல்பாட்டை தூண்டுவதற்கும் வித்திடும். அதன் மூலம் இரைப்பை குழாயை தயார்படுத்தவும் உதவிடும். இது செரிமான அமைப்புக்கு ‘வார்ம் அப்’ பயிற்சி போலவும் அமையும்’’ என்கிறார்கள். 

சாப்பிட்ட பிறகு அதிகம் தண்ணீர் குடித்தால் என்னவாகும்? 

உணவு உண்ட பிறகு தண்ணீர் அதிகம் பருகுவது வயிற்று வீக்கத்தை அதிகரிக்க செய்யும். 

நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். 
செரிமானம் மந்தமாக நடைபெறும். 
ஜூஸ் போன்ற நீராகாரம் பருகினாலும் உடல் சோர்வு ஏற்படும். உடல் எடையை குறைக்க உதவுமா? உடல் பருமன் சார்ந்த ஆய்விதழில் வெளியிடப்பட்ட சர்வேயில், சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு 500 மில்லி லிட்டர் தண்ணீர் பருகியவர்கள், தொடர்ந்து 12 வாரங்கள் தண்ணீர் பருகாதவர்களை காட்டிலும் உடல் எடையை குறைத்திருப்பது தெரிய வந்துள்ளது. 

சாப்பிடுவதற்கு முன்பு ஏன் தண்ணீர் பருக வேண்டும்? 

செரிமானம் துரிதமாக நடைபெறுவதற்கு நொதிகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். 

பசியை கட்டுப்படுத்தும். குறிப்பாக அதிகமாக சாப்பிடுவதை தடுக்கும். 

உணவு உட்கொள்வதற்கு ஏதுவாக வயிற்றின் உட்புற அடுக்கை தயார்படுத்தும். அத்துடன் செரிமான சுரப்பிகளை செயல்பட வைத்து உணவை உடைக்கும் நொதிகளின் செயல்பாட்டை ஊக்குவித்து செரிமான செயல்முறையை எளிதாக்கும். 

வயிறு வீக்கம் மற்றும் அசவுகரியத்தை குறைக்க உதவும். 

சாப்பிடும்போது தண்ணீர் பருகலாமா? 

சாப்பிடும்போது விக்கல் ஏற்பட்டாலோ, தாகமாக இருப்பது போல் உணர்ந்தாலோ சிறிதளவு தண்ணீர் பருகுவது தவறில்லை. சாப்பிட்ட உடனேயே அதிக அளவு தண்ணீர் குடிப்பதும் நல்லதல்ல. அப்படி அதிக அளவு தண்ணீர் குடிப்பது வயிற்று அமிலத்தை நீர்த்துப்போக செய்துவிடும். அந்த அமிலம்தான் புரதங்களை உடைக்கவும், நோய்க்கிருமிகளை கொல்லவும் அவசியமானது. எனவே சாப்பிட்டதும் தண்ணீர் பருகுவதை தவிர்ப்பதுதான் நல்லது. காலையில் தண்ணீர் பருகுவது நல்லதா? காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது இரவில் ஏற்பட்ட திரவ இழப்பை ஈடு செய்ய உதவிடும். வளர்சிதை மாற்ற செயல்பாட்டையும், குடல் இயக்கங்களையும் ஊக்குவிக்கும். காலையில் உடலில் நீர்ச்சத்தை சீராக்குவது செரிமானத்திற்கு உதவும். 

எப்போது தண்ணீர் பருகலாம்? 

செரிமானத்தை மேம்படுத்த சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீராவது பருக வேண்டும். 

தினமும் காலையில் குறைந்தபட்சம் 250 மில்லி லிட்டர் தண்ணீராவது (ஒரு டம்ளர்) பருக வேண்டும். 

சாப்பாட்டுடன் தொடர்புடைய சமயம் மட்டுமல்ல எப்போதும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க சீரான இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டே இருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.