அரசு உதவிபெறும் பள்ளிகளில்
உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதற்கான வழிகாட்டுதல்கள்
கல்வித்துறை வெளியீடு
2024-25-ம் கல்வியாண்டில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட வேண்டியவராக இருந்து 40 சதவீதம் பார்வை குறைபாடுடையவராக இருந்தால் அவருக்கு அதில் விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல், தேசிய மாணவர் படை அதிகாரியாக இருந்தால் அவருக்கும் விலக்கு அளிக்கவேண்டும்.
உபரி ஆசிரியர்கள் விவரங்களையும், பள்ளி நிர்வாகத்தின் மூலம் பணி நிரவல் செய்து மாறுதல் ஆணை வழங்கப்பட்ட விவரங்களையும் முதன்மை கல்வி அலுவலரிடம் அந்தந்த பள்ளிகள் தெரிவிக்க வேண்டும்.
பணி நிரவல் செய்யப்பட்ட விவரங்கள் ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிறுபான்மை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை பொறுத்தவரையில், உபரி ஆசிரியர்களை அதேவகையிலான பிற சிறுபான்மை பள்ளிகளில் பணி நிரவல் நடவடிக்கை செய்ய வேண்டும்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் மே இறுதி வாரத்தில் வருவாய் மாவட்டத்துக்குள் பணி நிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும், அதனைத்தொடர்ந்து அரசாணை எண் 146-ல் தெரிவிக்கப்பட்டு உள்ள நெறிமுறைகளின்படி தொடர் பணிநிரவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.