எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில்
சமூக அறிவியல் பாடத்தில் குழப்பமான ஒரு மதிப்பெண் கேள்வி
கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் கடந்த 15-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அன்று சமூக அறிவியல் தேர்வு நடந்தது. இதில் ஒரு மதிப்பெண் வினாக்களில் 4-வது கேள்வியில், கூற்று: ‘ஜோதிபாய் புலே ஆதரவற்றோர் விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதியையும் திறந்து வைத்தார். காரணம்: குழந்தை திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்’ என்று கேட்கப்பட்டிருந்தது.இதற்கான விடையாக ஏ. கேள்வி சரி என்றும், அதற்கான காரண கூற்று தவறு என இருந்தது. விடை பி. கேள்வி சரி என்றும், காரண கூற்றும் சரி என்றும் கூறப்பட்டிருந்தது. விடை சி. 2-ம் தவறு என குறிப்பிடப்பட்டிருந்தது. விடை டி. காரணம் சரி என்றும் கேள்வி பொருத்தமில்லாதது என்றும் கூறப்பட்டிருந்தது.
இதில் பெரும்பாலான மாணவர்கள் ‘ஏ’ என்ற விடையை தேர்வு செய்திருந்தனர்.
இந்தநிலையில் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் விடை ‘பி’ சரி என்று கூறியதாக தெரிகிறது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் சமூக அறிவியல் பாடத்தில் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர்கள் தரப்பில் கூறியதாவது:-
ஒரு மதிப்பெண் வினாக்களில் 4-வது கேள்வியில், ஜோதிபாய் புலே, விதவை மறுமணத்தை ஆதரித்தார் என்பதற்காக விதவைகளுக்கான விடுதியை திறந்து வைத்தார் என்ற காரணம் பொருத்தமாக இல்லை. இந்த வினாவால் ஏராளமான மாணவர்கள் ஒரு மதிப்பெண்ணை இழக்கும் சூழல் உள்ளது. எனவே நாளை (திங்கட்கிழமை) வினாத்தாள்கள் திருத்தப்பட உள்ள நிலையில் இந்த வினாவை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.