‘பள்ளி சாளரம்' டிஜிட்டல் தளத்தில்
அரசு பள்ளிகளின் விவரங்களை பதிவேற்ற தனிப்பக்கம் உருவாக்கம்
கல்வித் துறை ஏற்பாடு
பள்ளி சாளரம் டிஜிட்டல் தளத்தில் அரசு பள்ளிகளின் விவரங்களை பதிவேற்ற தனிப்பக்கம் உருவாக்கப்பட்டிருப்பதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது.
பள்ளி சாளரம் டிஜிட்டல் தளம்
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்கு பெரு, சிறு மற்றும் குறு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் செயலாற்றிட ஏதுவாக நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி என்ற இணையதளமும், அதற்காக தனியாக வங்கி கணக்கும் தொடங்கப்பட்டு தற்போது அது செயல்பாட்டில் உள்ளது.
இதுவரை கிட்டதட்ட ரூ.658 கோடியே 67 லட்சம் நிதி திரட்டப்பட்டு, அதன் மூலம் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
இந்த திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகள் பற்றிய ஆக்கப்பூர்வமான தகவல்களை பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் தெரிந்து கொள்ளும்வகையில் ‘பள்ளி சாளரம்' என்ற டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டது.
அரசு பள்ளிகளுக்கு தனிப்பக்கம்
அவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் தளத்தில் ஒவ்வொரு அரசு பள்ளியின் செயல்பாடு, வளர்ச்சி மற்றும் மாணவர்களின் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளுக்கு தனிப்பக்கத்தை பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்திருக்கிறது.
இதன் மூலம் உலகெங்கும் உள்ள மக்கள் தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளின் தரம், வளர்ச்சி மற்றும் மாற்றங்களை தன்னிச்சையாக திரைவழியே காண முடியும் என்றும், அதனை அடிப்படையாக கொண்டு முன்னாள் மாணவர்கள், பொது மக்கள் அரசு பள்ளிகளின் தேவைகளை அறிந்து பங்களிக்கும் வகையில் இந்த தனிப்பக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.