செரிமானத்திற்கு தீங்கு விளைவிக்கும் எதிரெதிர் உணவு பொருட்கள்
சாப்பிடும் உணவுகள் எதுவாக இருந்தாலும் அவை துரிதமாக செரிமானமாக வேண்டும். அதற்கேற்ப உணவுப்பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. சில உணவு பொருட்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது செரிமான அமைப்பை குழப்பி ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு இடையூறு ஏற்படுத்தும். செரிமான செயல்முறையை தாமதமாக்கி உடலுக்கு அசவுகரியத்தையும் ஏற்படுத்தும். அதனால் குடல் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். அத்தகைய எதிரெதிர் உணவு பொருட்கள் சிலவற்றை பற்றியும், அவற்றை ஏன் ஒன்றாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும் பார்ப்போம்.
பழம்-பால் பொருட்கள்
மாம்பழ மில்க்ஷேக், வாழைப்பழ ஸ்மூத்தி என பாலுடன் பழங்களை கலந்து பலரும் ருசிப்பார்கள். ஆனால் பாலுடன் பழங்களை சேர்ப்பது செரிமானத்தை மெதுவாக்கும். குறிப்பாக பால் செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் பழங்களோ விரைவாக செரிமானமாகி விடும். இரண்டையும் ஒன்றாக சாப்பிடும்போது நொதித்தல் செயல்முறையில் மாறுபாடு ஏற்படும். வயிறு உப்புசம் உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டாகும். பழங்களை தனியாக சாப்பிடுவதே சிறந்தது. பாலுக்கு பதிலாக நட்ஸ் வகைகளுடன் பழங்களை சேர்த்து சாப்பிடலாம்.
தயிர்-மீன்
தயிர் குளிர்ச்சி மிக்கது. மீன் இயற்கையாகவே வெப்பமானது. இரண்டையும் ஒன்றாக உட்கொள்வது வயிறு சார்ந்த பிரச்சினைகளை உண்டாக்கும். சரும நலனையும் பாதிப்புக்குள்ளாக்கும். இந்த இரு பொருட்களையும் அடிக்கடி ஒன்றாக சாப்பிட்டு வருவது குடலின் இயற்கையான செயல்பாட்டையும் சீர்குலைத்து விடும்.
டீ-மசாலா பொருட்கள்
டீயுடன் ஸ்நாக்ஸ் சேர்த்து பருகுவது பலருடைய வழக்கம். ஆனால் உப்பு கலந்த அல்லது வறுத்த ஸ்நாக்ஸ் வகைகளை டீயுடன் ருசிப்பது உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கக்கூடும். உணவின் ஊட்டச்சத்து மதிப்பையும் குறைக்கும். அஜீரணத்துக்கும் வழிவகுக்கும். டீயை தனியாக சாப்பிடுவதுதான் நல்லது. மூலிகை டீ, கசாயம் பருகுவது செரிமானத்துக்கு இன்னும் சிறப்பானது.
சாப்பாடு-பழம்
மதியமோ, இரவோ சாப்பிட்ட உடனேயே பழங்கள் சாப்பிடுவதும் செரிமான செயல்பாட்டை மெதுவாக்கும். பழங்கள் வேகமாக ஜீரணமாகி, உணவை செரிமானமாக்கவிடாமல் புளிக்க செய்துவிடும். அதனால் வாயு தொல்லை, வயிறு வீக்கம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். பழங்களை காலையிலோ அல்லது மற்ற நேரங்களில் தனியாகவோ சாப்பிடுவதுதான் நல்லது.
பால்-சிட்ரஸ்
பாலுடன் எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து பருகுவதும் தவறு. பால் அருந்திய உடனேயே சிட்ரஸ் நிறைந்த உணவுப்பொருட்களை உட்கொள்வதும் நல்லதல்ல. அவை வயிற்று அசவுகரியத்துக்கு வழிவகுக்கும். உணவுப்பொருட்களில் இருக்கும் கால்சியத்தை உறிஞ்சுவதை தடுக்கலாம்.